'இந்தியா என்றால் பாகிஸ்தான் வீரர்கள் பயப்படுகிறார்கள்' - ஒரே போடாக போட்ட பாக். மூத்த வீரர்!

ICC World Cup 2023: இந்திய அணிக்கு எதிராக விளையாடும்போது பாகிஸ்தான் வீரர்கள் பயப்படுகிறார்கள் என்றும் தங்களின் பரிந்துரைகள் பலிக்காது என்றும் அந்த அணியின் மூத்த வீரர் மொயின் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 2, 2023, 10:18 AM IST
  • பாகிஸ்தான் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நெதர்லாந்துடன் மோதுகிறது.
  • பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
  • இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் அக். 14ஆம் தேதி நடக்கிறது.
'இந்தியா என்றால் பாகிஸ்தான் வீரர்கள் பயப்படுகிறார்கள்' - ஒரே போடாக போட்ட பாக். மூத்த வீரர்! title=

ICC World Cup 2023: உலகக் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஏன் இந்தியா அணிக்கும் தான் அதிக வாய்ப்பு என பலரும் தற்போது தெரிவித்து வந்தாலும், 2 மாதங்களுக்கு முன் கேட்டிருந்தால் பாகிஸ்தான் தான் அனைவரின் தேர்வாகவும் இருந்திருக்கும். ஒருநாள் அரங்கில் நம்பர் 1 இடத்தில் இருந்தது மட்டுமின்றி, ஷாகின் அப்ரிடி - நசீம் ஷா - ஹரீஸ் ராஃப் என மிரட்டலான பந்துவீச்சு படைதான் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. 

பாகிஸ்தானுக்கு பின்னடைவு

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி சூப்பர் 6 சுற்றிலேயே தோல்வியுற்று வெளியேறியது. குறிப்பாக, அந்த தொடரில் ஹரீஸ் ராஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதால், சற்று பின்னடைவு ஏற்பட்டது. மேலும், மிடில் ஓவர்களில் சரியான சுழற்பந்துவீச்சு இல்லாமலும் பாகிஸ்தான் திணறி வருகிறது எனலாம். துணை கேப்டன் ஷதாப் கானும் சுழற்பந்துவீச்சில் சமீப காலத்தில் பெரிதாக சோபிக்கவில்லை.  

இந்நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்க சில நாள்களுக்கு முன் பாகிஸ்தான் அணி ஹைதராபாத் நகருக்கு வந்தது. பாகிஸ்தான் அணிக்கு விமான நிலையத்திலேயே அசத்தலான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பாகிஸ்தான் அணிக்கு அளிக்கப்பட்ட விருந்து அவர்களுக்கு நிறைவாக இருந்ததாக தகவல் வெளியாகின. மேலும், சில ரசிகர்களுடனும் அவர்கள் கலந்துரையாடினர். இருப்பினும், பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தாலும், ரிஸ்வான் - பாபர் ஆசாம் ஆகியோரின் பேட்டிங் ஃபார்ம் இன்னும் உறுதியாகவே உள்ளது, பந்துவீச்சை மட்டும் சற்று பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

மேலும் படிக்க | உலகக் கோப்பை தொடக்க விழாவில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?

வீரர்கள் பயன்படுகிறார்கள்

அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் சமீபத்திய ஃபார்ம் மற்றும் ஆசிய கோப்பையில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான மொயின் கான் கூறுகையில்,"இந்த விஷயத்தை 100% பார்த்தேன். வீரர்கள் பயத்துடன் காணப்பட்டனர், அவர்கள் ரிஸ்வானாக இருந்தாலும் சரி, ஷதாப் ஆக இருந்தாலும் சரி, ஷஹீனாக இருந்தாலும் சரி, பாபருக்கு ஆலோசனைகளை வழங்குவதில் கூட தயக்கத்தை காட்டுகின்றனர். பாகிஸ்தான் அணி எழுச்சி பெறவில்லை என்பது தெரிந்தது. விவாதங்கள் இல்லை, பரிந்துரைகள் இருந்தாலும் அவை பின்பற்றப்படவில்லை. பாபர் அவர்களைப் பின்தொடர்ந்தாலும், அவை வேலைக்கு ஆகவில்லை.

மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது பாகிஸ்தான் வீரர்கள் பயப்படுகிறார்கள். தங்கள் பரிந்துரைகள் பலிக்காது என்று உண்மையில் பயப்படுகிறார்கள், அதுதான் மிகப்பெரிய தயக்கமாக உள்ளது. ஒரு கிரிக்கெட் வீரராக, நீங்கள் உங்கள் திறனைப் பயன்படுத்தி விளையாட வேண்டும் மற்றும் நீங்கள் 100% பங்களிக்க வேண்டும். 

உங்கள் பரிந்துரைகள் தவறாக இருந்தாலும் பரவாயில்லை, அது நடக்கும். ஆனால் நீங்கள் வெற்றி பெற விரும்புகிறீர்களா என்பதை உங்கள் உடல் மொழிதான் காட்டும், ஆனால் அது உங்களிடம் தெரியவில்லை. டிரஸ்ஸிங் ரூமில் சில சிக்கல்கள் இருந்தன என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனக்கு தெரியும், ஒரு தொழில்முறை சூழலில், கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆனால் சிறப்பாக செயல்பட நீங்கள் அவற்றை முடித்து, நீங்கள் முன்னேறி செல்ல வேண்டும்" என்றார். 

உலகக் கோப்பையில் பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி, இந்திய அணியை ஆசிய கோப்பை தொடரில் இரண்டு முறை சந்தித்தது. குரூப் சுற்றில் இந்திய பேட்டர்களை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறடித்தாலும், மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டது. சூப்பர் 6 சுற்றில் பாகிஸ்தான் அணியை பந்தாடி இந்தியா பெரும் வெற்றியை பெற்றுள்ளது. உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியை நெதர்லாந்து அணியுடன் விளையாடுகிறது. பின்னர், இந்தியாவை பாகிஸ்தான் அணி வரும் அக். 14ஆம் தேதி சந்திக்கிறது.    

மேலும் படிக்க | அஸ்வினை சமாளிக்க ஆஸ்திரேலியா போட்ட வியூகம்.. ஆனால் தோல்வியில் முடிந்தது - ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News