வந்தே பாரத் ரயில் மூலம் சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி! வைரலாகும் படங்கள்!

சேலம் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் சென்னை வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

Written by - RK Spark | Last Updated : May 4, 2023, 01:57 PM IST
  • சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி.
  • வந்தே பாரத் ரயில் மூலம் வந்தடைந்தார்.
  • தொடர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வந்தே பாரத் ரயில் மூலம் சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி! வைரலாகும் படங்கள்! title=

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 24ம் தேதிமுதல் சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனையடுத்து இன்றைய தினம் காலை சேலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னை புறப்பட்டார். முன்னதாக சேலம் ரயில் நிலையத்திற்கு வந்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாசலம் தலைமையில், மாநகர அவை தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் வெங்கடாஜலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்கே செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி புதிதாக இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் ஏறி சென்னை கிளம்பினார்.

மேலும் படிக்க | மக்களை தேடி மேயர்: 'ஸ்மார் சிட்டியில் ஊழல்... உப்பு தின்னவன், தண்ணி குடிப்பான்' - அமைச்சர் சேகர்பாபு

சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையானது பிரதமர் மோடி, கடந்த மாதம் 8 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ரயில் இன்று சேலத்தில் இருந்து கிளம்பிய நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைந்தது.  முன்னதாக சேலத்தில் மக்கள் வரிப்பணம் ரூ. 82 கோடியை எடுத்து கடலில் எழுதாத பேனா வைக்க பணமுள்ளது; ஆனால் பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு வழங்க பணமில்லை என சேலத்தில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசி இருந்தார். 

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில்  மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  அப்போது அவர் பேசும்போது, தொழிலாளர்களுக்கு 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்பதே அடிப்படை ஆனால் இந்த அடிப்படையை மாற்றி திமுக அரசு 12 மணி நேர வேலை என்று அறிவித்தார்கள். இதை கூட்டணியிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரே எதிர்த்தார்கள்.  ஒட்டு மொத்த தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அஞ்சி நடுங்கி அதை ரத்து செய்துள்ளார் முதலமைச்சர் என்றார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடுவது போல பேசி வருகின்றனர். மக்கள் நன்மையடைய கூடிய திட்டங்கள் ஏதும் இதுவரை நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் அற்புதமான திட்டங்களை நிறைவேற்றினோம்.

அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை அவ்வப்போது மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. என்ற அவர்,  அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி, திமுக எப்போது போகும் அதிமுக எப்போது ஆட்சிக்கு வரும் என்று ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்க்கிறார்கள் என்றார்.  தொடர்ந்து பேசிய அவர், ரூ 30 ஆயிரம் கோடி ஊழல் என்று அதிமுக சொல்லவில்லை ; தமிழ்நாட்டின் நிதியமைச்சரே அம்பலப்படுத்தியுள்ளார். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் ஸ்டாலின் இது தொடர்பாக வாய்திறக்கவே இல்லை. 30 ஆயிரம் கோடியில் மாவட்டத்துக்கு ரூ ஆயிரம் கோடி கொடுங்கள் மக்கள் சந்தோசப்படுவார்கள். ஊழல் தொடர்பாக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினராவது குரல் கொடுத்தார்களா?. ஆர் எஸ் பாரதி ஏன் பேசவில்லை ; மடியில் கணம் இருக்கின்ற பயத்தினால் யாரும் பேசவில்லை என்றார்.  எதிர்வரும் காலத்தில் அந்தக்கட்சிகள் அனைத்தும் காணாமல் போகும். எந்த பி்ரச்னையாக இருந்தாலும் முதலில் குரல் கொடுப்பது அதிமுக மட்டும்தான்.  அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | அதிமுக அல்லது திமுக: எந்த கூட்டணியில் பாமக? அன்புமணி ராமதாஸ் போடும் கணக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News